குன்னூர் அருகே அணியாடா தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த, ஆந்திரத்தைச் சேர்ந்த இளம் பெண்ணைக் கிண்டல் செய்ததைத் தட்டிக் கேட்ட அவரது தந்தையை கீழே தள்ளிவிட்டுக் கொலை செய்ததாக கோவையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே அணியாடா பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஆந்திரத்தில் இருந்து சுற்றுலா வந்திருந்த ரவிகாந்த் (45) தனது மனைவி, மகளுடன் தங்கியிருந்தார். அப்போது அவரது மகளை, அருகில் உள்ள மற்றொரு தங்கும் விடுதியில் இருந்த கோவையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ரவிகாந்த் இதுகுறித்து இளைஞர்களைத் தட்டிக்கேட்டாராம். அப்போது, ஏற்பட்ட தகராறில் இரண்டு இளைஞர்களும் சேர்ந்து ரவிகாந்தை கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதில், தலையில் அடிபட்டு அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக தங்கும் விடுதியில் இருந்த கோவையைச் சேர்ந்த கோகுல்நாத் (28), வசந்தகுமார் ( 31) ஆகிய இருவரை குன்னூர் போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.