நீரில் தவறி விழுந்து அடித்த செல்லப்பட்ட வாலிபரின் உடல் 4 நாள்களுக்குப் பின் பன்னிமேடு எஸ்டேட் ஆற்றில் மீட்கப்பட்டது.
வால்பாறையை அடுதத நல்லகாத்து எஸ்டேட்டைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (37). டூரிஸ்ட் வேன் ஓட்டுநரான இவர் கடந்த செவ்வாய்க்கிழமை வால்பாறையை அடுத்த வெள்ளமலை எஸ்டேட் பகுதிக்கு தனது நண்பர்களுடன் சென்றார். அப்பகுதியில் உள்ள சுரங்கம் வழியாக வரும் தண்ணீர் அருகே சென்று புகைப்படம் எடுக்க முயன்றபோது தவறி விழுந்த ஜெயபிரகாஷ் நீரில் அடித்து செல்லப்பட்டார்.
வால்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் ஆறுகளில் தேடும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை காலை வால்பாறையை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் 11ஆவது டிவிஷன் தேயிலை தோட்டம் அமைந்துள்ள பகுதி வழியாகச் செல்லும் ஆற்றில் மிதந்த ஜெயபிராஷின் உடலை அப்பகுதியினர் மீட்டனர். பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.