உடல் ஆரோக்கியம், கட்டுக்கோப்பான உடல்நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஞாயிற்றுக்கிழமை கூடலூர் வந்தடைந்தார்.
இளைஞர்கள் தங்களின் உடலை ஆரோக்கியத்துடனும் கட்டுக்கோப்புடனும் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கேரள மாநிலம், கண்ணனூரில் சைக்கிள் பயணத்தை சனிக்கிழமை தொடங்கி, மானந்தவாடி, வயநாடு மலைப் பாதைகளை கடந்து வந்த ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு சனிக்கிழமை இரவு சுல்தான்பத்தேரியில் தங்கினார்.
அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை தனது பயணத்தைத் தொடங்கிய மலைப் பாதையில் சைக்கிளில் பயணித்து கூடலூர் வந்தடைந்தார். கண்ணனூரில் இருந்து சுமார் 225 கி.மீ. தூரம் பயணித்து உதகையில் தனது சைக்கிள் பயணத்தை நிறைவு செய்கிறார்.
கடந்த 13ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது உடல் கட்டுக்கோப்பு குறித்த விடியோவை வெளியிட்டு 40 வயதைக் கடந்த ஐ.பி.எஸ்.அதிகாரிகள் தங்கள் உடலைக் கட்டுக்கோப்போடும், ஆரோக்கியத்தோடும் வைத்திருப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். அதன்படி, காவல் துறை உயர் அதிகாரியான சைலேந்திர பாபு சைக்கிள் பயணம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "இளைஞர்கள் சைக்கிள் பயணம் மேற்கொள்வது மற்றும் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவதால் உடலைக் கட்டுக்கோப்புடனும், ஆரோக்கியத்துடனும் வைத்திருக்க முடியும்' என்றார்.