கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கோத்திமுக்கு, கரிக்கையூர், பங்களாப்படிகை ஆகிய கிராமங்களில் பழங்குடியின மக்களுக்கான கோழிப் பண்ணைகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்தார்.
பங்களாப்படிகை கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கான கோழிப் பண்ணைகளைத் திறந்து வைத்து மாவட்ட ஆட்சியர் இன்னசெனட் திவ்யா கூறியதாவது:
கோத்தகிரி வட்டத்திற்கு உள்பட்ட பழங்குடியினர் கிராமங்களில் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றும் வகையில் கோழிப் பண்ணைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் தீர்மானித்து கோத்திமுக்கு, கரிக்கையூர், பங்களாப்படிகை மற்றும் திருச்சிக்கடி என நான்கு சங்கங்கள் அமைக்கப்பட்டு, பழங்குடி கிராமங்கள் இச்சங்கத்தில் இணைக்கப்பட்டனர்.
கோத்திமுக்கு, கரிக்கையூர், பங்களாப்படிகை ஆகிய சங்கங்களுக்கு மொத்தம் 250 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஆதி திராவிட நலத் துறை மூலம் ரூ. 19 லட்சத்தில் கோழிகள் மற்றும் தீவனங்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் கோழி வளர்ப்புக்குத் தேவையான கொட்டகை ரூ. 85 லட்சம் மதிப்பீட்டில் உள்ளுர் மக்களைக் கொண்டு கட்டி கொடுக்கப்பட்டது. இதன் மூலமாக 250 பழங்குடியினர் குடும்பங்கள் பயனடைவார்கள் என்றார்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் கலைமன்னன், பழங்குடியின தனி அலுவலர் குமாரராஜா, உதவி செயற்பொறியாளர் அசோகன், கால்நடை மருத்துவர் டாக்டர் ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள், பழங்குடியின மக்கள் பலர் கலந்து கொண்டனர்.