வால்பாறையில் கூண்டுவைத்துப் பிடித்த சிறுத்தையை முதுமலை வனப் பகுதிக்குள் விடுவித்துள்ளதற்கு நீலகிரி மாவட்ட இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
வால்பாறை சிக்கோனா எஸ்டேட்டை பகுதியில் வனத் துறையினர் வைத்திருந்த கூண்டில் சனிக்கிழமை இரவு சுமார் 11.30 மணி அளவில் சிறுத்தை சிக்கியது. இது சுமார் 5 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை ஆகும். இதை வண்டலூர் உயிரியல் பூங்காவில் விடுவிப்பது அல்லது சேலத்திலுள்ள மிருகக்காட்சி சாலைக்குக் கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்குக் கொண்டு வந்து வனப் பகுதிக்குள் விடுவித்துள்ளனர்.
இது குறித்து வனத் துறை கால்நடை மருத்துவர் டாக்டர் மனோகரன் கூறுகையில், உயர் அதிகாரிகள் எடுத்த முடிவின்பேரிலேயே சிறுத்தை முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் விடுவிக்கப்பட்டுள்ளது என்றார். ஆனால், முதுமலையில் இந்த சிறுத்தையை விடுவித்துள்ளதற்கு இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆர்வலரான நைஜில் ஆட்டர் கூறுகையில், " மனிதர்களைத் தாக்கத் தொடங்கியதிலிருந்து சிறுத்தையின் ருசியில் மனித ரத்தம் படிந்துவிட்டது. இது உணவுக்காக பிற வன விலங்குகளைத் தாக்காமல், மனிதர்களையே தாக்கத் தொடங்கும் அபாயம் உள்ளது' என்றார்.
சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் எந்தப் பகுதியில் விடுவிக்கப்பட்டது எனத் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பொதுமக்கள் வசிக்கக்கூடிய இடத்திற்கு அருகிலேயே வனப் பகுதிக்குள் சிறுத்தை விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் மசினகுடி, சீகூர், மாயாறு பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பீதியில் உள்ளதாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.