உதகை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளில் பாலகொலா ஊராட்சி ஓரநள்ளி பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் சமையல் கூடம் பழுதுபார்ப்பு, நஞ்சநாடு ஊராட்சி அம்மனட்டி கிராமம் முதல் நஞ்சநாடு வரை தாய் திட்டத்தின்கீழ் ரூ.5.4 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, தொட்டபெட்டா ஊராட்சிக்குட்பட்ட கப்பத்தொரை பகுதியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட சாலை பணி ஆகியவற்றை ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
அதேபோல், நஞ்சநாடு ஊராட்சியில் மேல்கவ்வட்டி பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் தடுப்புச் சுவர் கட்டும் பணி, குருத்துக்குளி பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் தடுப்புச் சுவர் கட்டும் பணி, நபார்டு திட்டத்தின்கீழ் தீட்டுக்கல் முதல் பார்சன்ஸ்வேலி வரை ரூ.21 லட்சம் செலவில் நடைபெற்று வரும் சாலை பணி உள்ளிட்ட மொத்தம் ரூ.69 லட்சம் செலவில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர், இப் பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக லவ்டேல் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் நவீன பாலகத்தைத் திறந்து வைத்த ஆட்சியர்,
முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார். இந்த ஆய்வுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன், உதகை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டி.ரமேஷ் கிருஷ்ணன் மற்றும் சுகுமாரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.