மஞ்சூர் அருகேயுள்ளஓணிகண்டியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மஞ்சூர் அருகே ஓணிகண்டி, அன்னமலை, காமராஜர் நகர், அண்ணாநகர், பெள்ளத்திக்கம்பை உள்ளிட்ட10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தேயிலைத் தோட்டம், கட்டடத் தொழிலாளிகளாக உள்ளனர். இந்த கிராம மக்கள் தங்களுக்குத் தேவையான ரேஷன் பொருள்களை வாங்க கீழ்குந்தா கிராமத்திலுள்ள ரேஷன் கடைக்குத் தான் வர வேண்டும்.
இக் கடையில் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் ரேஷன் பொருள்கள் வாங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதனால், தினசரி கூலி வேலைக்கு செல்வோர் 2 அல்லது 3 நாள்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரனை நடத்தி ஓணிகண்டி பகுதியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து அண்ணா நகர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் கூறியதாவது: பொருள்கள் வாங்க மாதத்தின் முதல் வாரத்தில் ரேஷன் கடையிலேயே நேரத்தைச் செலவிட வேண்டிய நிலை உள்ளது என்றார்.