குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் உள்ள தடுப்பணைகளைத் தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரியில் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான தடுப்பணைகளில் சகதிஅதிகரித்துள்ளது. இதனால், மழையின்போது தண்ணீரைச் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குன்னூர் வட்டத்துக்கு உள்பட்ட 10-க்கும் மேற்பட்ட அணைகள், 50-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளிலிருந்து கொண்டுவரப்படும் தண்ணீர் கிராமங்களில் அமைக்கப்பட்ட குடிநீர்த் தொட்டியில் சேமிக்கப்பட்ட பின் பொதுக் குழாய் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இதைத் தவிர ஏராளமான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
குன்னூர், கோத்தகிரியில் உள்ளாட்சிஅமைப்புகளின் கீழ் உள்ள பந்துமை, ஈளடா உள்ளிட்ட பெரும்பாலான தடுப்பணைகள் கடந்த பலஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமலும், முழுமையாகத் தூர்வாரப்படாமலும் உள்ளன. இதனால், மழைக் காலத்தில் தண்ணீரைச் சேமிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் கடந்த ஐந்தாண்டுகளில் ரூ. 12 கோடி மதிப்பீட்டில் 500-க்கும் மேற்பட்ட குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 80 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், சில தடுப்பணைகளில் பெயரளவுக்குப் புனரமைப்புப் பணிகள் நடத்தப்பட்டு அதன்மூலம் பல லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது.
தற்போது, மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருக்கும் சூழலில் நீரோடைகளில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், தடுப்பணைகளில் சேர்ந்துள்ள சகதியால் தண்ணீரைச் சேமிக்க முடியவில்லை.
கடந்த ஆண்டில் போதிய மழை இல்லாததால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீராதாரங்கள் அனைத்தும் வறண்டன. எனவே, கோடைக் காலத்தைக் கருத்தில் கொண்டு நீராதாரப் பகுதிகளை முழுமையாகத் தூர்வாரி தண்ணீரைச் சேமிக்க வேண்டும். இதற்காக தடுப்பணைகளை ஆய்வுசெய்து விரைவில் தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.