முதுமலை புலிகள் காப்பக வனத்திலுள்ள கிராமத்தில் உள்ள மழலையர் பள்ளியில் காவல்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நீலகிரி மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் வனப் பகுதியில் உள்ள கிராமங்களில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பழங்குடி மக்கள் சமூகவிரோதிகளின் மூளைச் சலவைக்கு ஆளாகாமல் தடுத்துவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக முதுமலை
புலிகள் காப்பகத்தில் உள்ள நாகம்பள்ளியில் உள்ள மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்கு படுக்கை,போர்வை, உடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து வனத்திலுள்ள குடியிருப்புகளுக்குச் சென்று பழங்குடி மக்களிடம் புதிய ஆள்கள் நடமாட்டம் குறித்த தகவல்களைச் சேகரித்தனர். குறைகள் இருந்தால் காவல்துறையினர் வரும்போது தெரிவித்தால் போதும். அடையாளம் தெரியாத நபர்களிடம் எந்த தகவல்களையும் பரிமாறவேண்டாம் என்று அறிவுரைகளை வழங்கினர். நக்ஸல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் ஜீவானந்தம் தலைமையில் உதவி ஆய்வாளர் விஜயன், தனிப்பிரிவு காவலர் மகேஷ் மற்றும் நக்ஸல் தடுப்புக் காவலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.