கோத்தகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட காளவாய் பகுதி முதல் காம்பாய் கடை வரை செல்லும் நடைபாதை மற்றும் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளதாலும், கழிவு நீர் சாலையில் தேங்குவதாலும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இப் பகுதியில் பேரூராட்சி சார்பில் ஓடையைத் தூர்வாரி சாலைகளிலேயே கழிவுகளைக் கொட்டிவிட்டனர். இதனால், அப்பகுதியில் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், இப்பகுதியில் கழிப்பறை இல்லாத சிலர் மனிதக் கழிவுகளை ஓடை புறம்போக்கில் கலக்க விடுவதாலும் துர்நாற்றம் வீசுகிறது.மேலும், கழிவுகளை சாலையில் கொட்டியிருப்பதால் இக்கழிவுகளை உண்ண கரடிகள், காட்டுப் பன்றிகள் இப்பகுதியில் உலவி வருகின்றன. இதனால், இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் செல்ல முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இதே போல், மாரியப்பன் லைன் செல்லும் சாலையிலும் இதே பிரச்னை உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்ரு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.