உதகையில் நடைபெற்ற கட்டுமானப் பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி இறந்தார்.
உதகை அருகே பழைய கார்டன் சாலையில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் உதகை அருகிலுள்ள கடசோலை பகுதியைச் சேர்ந்த துரைராஜ் (57) என்பவரும் வேலை செய்து வந்தார். இவர்கள் வேலை செய்து வந்த இடம் பழைய கட்டடங்கள் அதிக அளவில் நிறைந்த பகுதியாகும். அத்துடன் சரிவான பகுதி என்பதால், கடந்த சில நாள்களாக உதகையில் பெய்த பலத்த மழையால் மண் திட்டுக்கள் மழை நீரால் ஊறி இருந்தன.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்டுமானப் பணியின்போது திடீரென மண் சரிந்ததில், பணியில் ஈடுபட்டிருந்த துரைராஜ் உள்ளே சிக்கிக் கொண்டார்.
சக தொழிலாளர்களால் அவரைக் காப்பாற்ற முடியாத நிலையில், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் போராடி துரைராஜை மீட்டு சிகிச்சைச்காக உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதற்குள் அவர் இறந்துவிட்டார். எனவே பிரேத பரிசோதனைக்காக அங்கேயே அவரது உடல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக உதகை நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.