தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித் தருவது குறித்து மறுவாழ்வுத் துறை அதிகாரிகள் கூடலூரில் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக ஆய்வு மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் வசிக்கும் தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு இலவசமாக பசுமை வீடுகள் கட்டித் தருவது தொடர்பாக மறுவாழ்வுத் துறை துணை இயக்குநர் ரமேஷ், துணை ஆட்சியர் ரங்கராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். கூடலூர் வட்டத்திலுள்ள ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை, பந்தலூர் வட்டத்திலுள்ள நெலாக்கோட்டை, சேரங்கோடு ஆகிய ஊராட்சிகளில் இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற ரெப்கோ வங்கியின் டெலிகேட்ஸ் யூனியனின் தென்னிந்திய தலைவர் சு.ஆனந்தராஜா, துணைத் தலைவர் கு.கிருஷ்ணபாரதியார், மாவட்டப் பிரதிநிதி வேலூராஜேந்திரன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஆய்வுக்குப் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் 3.5 லட்சம் தாயகம் திரும்பிய தமிழர்களின் நிலை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
அரசு வழங்கும் பசுமை வீடுகளை தாயகம் திரும்பிய அனைத்துத் தமிழர்களுக்கும் வழங்க வேண்டும். பட்டா இல்லாத அரசு நிலங்களில் வசித்து வரும் தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி, இந்தத் திட்டத்தில் பயனாளிகளாகச் சேர்க்க வேண்டும். பேரூராட்சிகள், நகராட்சிகளில் வசிக்கும் தாயகம் திரும்பியோருக்கும் இந்தத் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும். அரசு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு அரசே நிலம் வழங்கி வீடுகட்டித் தர வேண்டும். 1984ஆம் ஆண்டு வரையிலான வீட்டுக் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. அதற்குப் பிறகு வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு நிலுவையிலுள்ள கடன்களை தள்ளுபடி செய்து ஆவணங்கள் மற்றும் நிலப் பத்திரங்களை பயனாளிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தாயகம் திரும்பியோருக்கு ரெப்கோ வங்கியில் மேலதிக பங்குகளை வாங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெலிகேட்ஸ் யூனியன் நிர்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்தனர்.