உதகையில் கொட்டும் மழையில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
உதகையில் விஸ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா மற்றும் இந்து சேவா சங்கம் ஆகியவற்றின் சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் உதகையிலும், கேத்தியிலும் மட்டுமே சனிக்கிழமை விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. கேத்தியில் வைக்கப்பட்டிருந்த 6 சிலைகள் அங்கிருந்து எல்லநள்ளி வழியாக உதகைக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் காமராஜர் சாகர் நீர்த்தேக்கத்ததில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
அதேபோல உதகை, காந்தல் பகுதியில் இருந்து சனிக்கிழமை காலையில் 83 சிலைகளுடன் தொடங்கிய ஊர்வலம் ரோகிணி சந்திப்பு, ஆட்சியர் அலுவலகம் வழியாக சேரிங்கிராஸை சென்றடைந்தது. அங்கு அன்னதானம் வழங்கப்பட்ட பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சேரிங்கிராஸ், கமர்ஷியல் சாலை, காபி ஹவுஸ் சந்திப்பு, மெயின் பஜார் வழியாக மின்வாரிய ரவுண்டானா பகுதியைச் சென்றடைந்து அங்கிருந்து காமராஜர் சாகர் நீர்த்தேக்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. காந்தல் பகுதியும், மெயின்பஜார் பகுதியும் பதற்றம் நிறைந்த பகுதிகள் என்பதால் இவ்விரு இடங்களிலும் காலை முதலே பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஊர்வலம் சென்ற பாதையில் ஊர்வலக் குழுவினருடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்ரியா நடந்து வந்ததுடன் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படும் காமராஜர் சாகர் நீர்த்தேக்கத்துக்கும் அவர் சென்றிருந்தார்.
ஊர்வலத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் அவர், உதகையிலும், கேத்தியிலும் நடைபெற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலம் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட 83 சிலைகளும் காமராஜர் சாகர் நீர்த்தேக்கத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டுள்ளன.
இதற்கான பாதுகாப்புப் பணியில் காவல் துறை அதிகாரிகளுடன் 300 பேர் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை விசர்ஜன ஊர்வலங்கள் நடைபெறவுள்ளன. இந்த ஊர்வலத்தின்போது 800 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்' என்றார்.உதகையில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றபோது திடீரென மழை பெய்யத் தொடங்கியது.
இருப்பினும் மழையையும் பொருட்படுத்தாமல் வழக்கமான உற்சாகத்துடனேயே விநாயகர் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன.