மஞ்சூர் அருகே கிண்ணக்கொரை அரசுப் பள்ளியில் 25-க்கு குறைவான மாணவர்கள் கல்வி பயின்று வருவதால் பள்ளி மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் பெற்றோர், மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் இருந்து 30 கி.மீ தொலைவில் கிண்ணக்கொரை கிராமம் உள்ளது. இப்பகுதியைச் சுற்றி இரியசீகை, இந்திரா நகர், ஜேஜே நகர், தனியகண்டி உள்பட பல்வேறு பகுதிகள் உள்ளன.
இப்பகுதிகளின் குழந்தைகளின் வசதிக்காக கிண்ணக்கொரை கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அரசு உயர்நிலைப் பள்ளி துவங்கப்பட்டது. இப்பள்ளியில் துவக்கத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். கடந்த ஆண்டுக்கு முன்வரை 200-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். ஆனால் இப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி இல்லாத நிலையில் பெரும்பாலான பெற்றோர்கள் இப்பள்ளியில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க தயக்கம் காட்டத் துவங்கினர்.
இதனால் கிண்ணக்கொரை அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைப் படிப்படியாக குறைந்து தற்போது இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல்10 ஆம் வகுப்பு வரை 24 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். இப்பள்ளி மேல்நிலைப் பள்ளிக்கான தகுதி பெற்ற போதிலும் போதிய மாணவர்கள் இல்லாத நிலையில் மீண்டும் உயர் நிலைப் பள்ளியாகவே செயல்படுகிறது.
தற்போது இப்பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள துவக்கப் பள்ளியிலும் மாணவர்கள்எண்ணிக்கை குறைந்து தற்போது 20 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். எனவே, கிண்ணக்கொரை மற்றும் இரியசீகை உள்ளிட்ட பகுதியிலுள்ள மாணவர்கள் நலன் கருதி கிண்ணக்கொரை அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும். ஆங்கில வழிக் கல்வியை கொண்டு வருவதன் மூலம் மீண்டும் இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இல்லையேல் தற்போதுள்ள மாணவர்களின் எண்ணிக்கை மேலும் படிப்படியாக குறைந்து ஒரிரு ஆண்டுகளில்பள்ளிளை மூடும் அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த குமார் கூறுகையில்,
கடந்த காலங்களில் இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் இன்று பல்வேறு துறையில் சிறந்து விளங்கி வருகின்றனர். ஆனால் தற்போது இப்பள்ளியில் குறைந்த அளவில் மாணவர்கள் உள்ளதால் இதனை மூடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளியை மூடினால் 30 கி.மீ தொலைவிலுள்ள மஞ்சூர் அரசுப் பள்ளிக்குதான் மாணவர்கள் சென்று கல்வி பயில வேண்டும். நீண்ட தூரம் மாணவர்கள் சென்று கல்வி பயின்று வருவதால் மாணவர்கள் உடல் அளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் பாதிக்கப்படுவார்கள் என்றார்.