பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் விதைப்புப் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் மானாவாரி நிலங்களில் புரட்டாசிப் பட்டத்தில் கம்பு, சோளம், கொள்ளு மற்றும் கால்நடைத் தீவனப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆவணி, புரட்டாசி மாதங்களில் விதைப்புப் பணிகள் முடிந்து விடும். ஆனால், இந்த ஆண்டு ஆவணி, புரட்டாசி மாதங்களில் மழை பெய்யாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் பெய்த பலத்த மழையினால் விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்பட்டுள்ளது.
தற்போது, விதைப்புப் பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதற்காக, விதை தானியங்கள் கொள்முதல் செய்து வருகின்றனர். சோளம், கம்பு, கொள்ளு உள்ளிட்ட விதை தானியங்கள் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
மஞ்சள் சோளத்தட்டுகளைபோல பிற தீவனங்களை கறவை மாடுகள் நன்றாக சாப்பிடாது. பருவம் தவறி சாகுபடி செய்வதால் விளைச்சல் குறையவும், சோளப் பயிரின் வளர்ச்சி பாதிக்கவும் வாய்ப்புள்ளது. இதனால், அடுத்த ஆண்டில் கால்நடைத் தீவனப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என்றனர்.