உடுமலை அருகே குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
உடுமலை வட்டம், குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட வி.வேலூர் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அப்பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளும் பழுதாகி விட்ட நிலையில், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், வி.வேலூர் பிரதான சாலையில் காலிக் குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த குடிமங்கலம் போலீஸார், ஒன்றிய அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், ஒரு சில நாள்களில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.