அறிவொளி நகரில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் கருப்புக் கொடி கட்டி சனிக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, நாரணாபுரம் கிராமம், அறிவொளி நகரில் கடந்த 23 ஆண்டுகளாக அரசுப் புறம்போக்கு நிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அவர்களுக்குத் தெருவிளக்கு, குடிநீர், தார்சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி மன்ற நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. ஆனால், அவர்களுக்கு இதுவரை வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லை.
பட்டா வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் வரை தேர்தல்களைப் புறக்கணிப்பது என்றும் அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.
மேலும், அறிவொளி நகரில் இருந்த அனைத்து அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்களையும் அகற்றியுள்ளனர். இதையடுத்து, வீடுகள் தோறும் கருப்புக் கொடி கட்டி சனிக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.