பல்லடம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை தமிழக அரசின் நிதித் துறைச் செயலர் பி.செந்தில்குமார் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
பல்லடம், ராயர்பாளையத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை மற்றும் வேளாண்மைத் துறை சார்பில் குறுகிய காலத்தில் மண் இன்றி தண்ணீரில் மட்டுமே வளர்க்கப்படும் கால்நடைத் தீவனமான அசோலா தீவனம் வளர்ப்புப் பணி, பணிக்கம்பட்டியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குட்டையைத் தூர்வாரும் பணி, மண் புழு, இயற்கை உரம் தயாரித்தல், குறைந்த தண்ணீரில் புதிய தொழில்நுட்பத்தில் மரக்கன்றுகள் வளர்க்கும் முறை, செம்மிபாளையத்தில் அத்தப்பன் என்பவரது தோட்டக் குளத்தில் ரூ. 1.43 லட்சத்தில் கற்களால் கட்டப்பட்டுள்ள தடுப்பணை ஆகியவற்றை தமிழக அரசின் நிதித் துறைச் செயலரும் (செலவினம்), திருப்பூர் மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான பி.செந்தில்குமார் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் (பொறுப்பு) மைக்கேல், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.