அவிநாசியில் வயதான தம்பதி விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டனர்.
அவிநாசி, சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி (90). இவரது மனைவி வள்ளியம்மாள் (86). இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள்அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். இவர்களது 2-ஆவது மகன் குமாரசாமி மட்டும் தனது மனைவி, குழந்தைகளுடன் மாடியில் வசித்து வருகிறார். இவர் அவ்வப்போது கீழ் தளத்தில் வசிக்கும் பெற்றோரைக் கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், வள்ளியம்மாள் கடந்த 4 ஆண்டுகளாக நடக்க முடியாமல் இருந்துள்ளார். தள்ளாத வயதில் மனைவியை சரியாக பராமரிக்க முடியாத வருத்தத்தில் கணபதி இருந்துள்ளார்.
இதில் மனமுடைந்த தம்பதி கணபதி, வள்ளியம்மாள் ஆகியோர் புதன்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். குமாரசாமி, வழக்கம்போல வியாழக்கிழமை காலை பெற்றோரை பார்க்க சென்றபோது இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவலறிந்த அவிநாசி போலீஸார், தம்பதியின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவிநாசி போலீஸார் விசாரிக்கின்றனர்.