காங்கயம் அருகே, கட்டுமானப் பணியின்போது சாரம் சரிந்து விழுந்ததில் ஒடிஸா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார்.
காங்கயத்தை அடுத்துள்ள, ஊதியூரில் இருந்து குண்டடம் செல்லும் சாலையில் உள்ள கருக்கம்பாளையம் பிரிவு அருகே ஒரு தனியார் பால் நிறுவனம், புதிய பால் பண்ணை அமைக்க கட்டடம் கட்டி வருகிறது. இந்த கட்டுமானப் பணியில் பலர் வேலைசெய்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்த கட்டுமான பணிக்கான அமைக்கப்பட்டிருந்த சாரம் வெள்ளிக்கிழமை மாலை சரிந்துள்ளது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த கோபால் சிதா (40), மேற்கு வங்கத்தை சேர்ந்த ஹரிகுல் (21), முத்தையா(30) ஆகியோர் காயமடைந்தனர்.
இதில் இடிபாடுகளில் சிக்கிய கோபால்சிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ஊதியூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.