மருத்துவமனையில் சிறுவன் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்

திருப்பூரில் தவறான சிகிச்சை அளித்ததால் சிறுவன் உயிரிழந்து விட்டதாக கூறி தனியார் மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து அவரது உறவினர்கள்

திருப்பூரில் தவறான சிகிச்சை அளித்ததால் சிறுவன் உயிரிழந்து விட்டதாக கூறி தனியார் மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து அவரது உறவினர்கள், பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர்,  பலவஞ்சிபாளையம்,  கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம்.  பின்னலாடை  நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது மகன் ரித்திஷ் (6).  அருகில் உள்ள பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10 நாள்களுக்கு முன் ரித்திஷ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.  இதனைத் தொடர்ந்து அவரை திருப்பூர்,  தாராபுரம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.  இரு தினங்கள் தங்கி சிகிச்சை பெற்ற பிறகு சிறுவன் வீடு திரும்பியுள்ளார்.  அதற்குப் பிறகும் இருமுறை  மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,  சிறுவனுக்கு வியாழக்கிழமை இரவு வயிற்று வலி ஏற்பட்டு,  ரத்த வாந்தி எடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து உடனடியாக பெற்றோர் அவரை திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துமனையில் சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து,  சிறுவனை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
ஆனால் பெற்றோர் அவரை கோவைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும்,  பிறகு வெள்ளிக்கிழமை காலை ஏற்கெனவே சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தவறான சிகிச்சை காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாக கூறி, தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மாநகர காவல் துணை ஆணையர் கயல்விழி மற்றும் வீரபாண்டி போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில்,  விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வீரபாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,  பாதிக்கப்பட்டவர்கள் முன்னிலையில்,  போலீஸார் மருத்துவமனை நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர்.  மருத்துவமனை
 நிர்வாகம் சார்பில் உரிய விளக்கமளிக்கப்பட்டது.
நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு சிறுவனின் உடலைப் பெற்றோர் பெற்றுச் சென்றனர். காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com