திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே கார் மீது லாரி மோதியதில் இரு குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
ஈரோடு சம்பத் நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் (42). இவரது மனைவி கவிதா(37). இவர்களது குழந்தைகள் அபிஷேக் (10), ஷாலினி (5), உறவினர் ராஜ்குமார்(35), அவரது மனைவி சத்யா(28) ஆகிய 6 பேரும் ஈரோட்டிலிருந்து, கோவைக்கு காரில் சனிக்கிழமை வந்து கொண்டிருந்தனர். அவிநாசி-பழங்கரை புறவழிச் சாலையில் இணைப்புச் சாலை அருகே அவிநாசியில் இருந்து பெருமாநல்லூர் நோக்கி சிமென்ட் ஏற்றிக் கொண்டு வந்த லாரி, கனகராஜின் கார் மீது மோதியது.
இதில், காரில் பயணித்த அபிஷேக், ஷாலினி உள்ளிட்ட 6 பேரும் படுகாயமடைந்தனர். அவ்வழியே வந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவிநாசி போலீஸார் விசாரிக்கின்றனர்.