மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பேரவைக் கூட்டம் உடுமலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெகதீஸ் தலைமை வகித்தார். ஏ.பாபு வரவேற்றார்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அரசு மருத்துவமனைகளில் மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை வழங்க வேண்டும். 40 சதவீத ஊனம் உள்ளவர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும்.
வங்கிகளில் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்குப் பணிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருப்பூர் மாவட்டத் தலைவர் பா.ராஜேஷ், துணைத் தலைவர் ஏ.மாலினி, நிர்வாகிகள் எஸ்.ஆர்.மதுசூதனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.