தாராபுரம் நகரில் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் இருந்த தனியார் நிறுவனம் மற்றும் வீடுகளுக்கு நகராட்சி சார்பில் மொத்தம் ரூ. 45 ஆயிரம் புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் உள்ளாட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, தாராபுரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் 63 பணியாளர்கள் நகரில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு, கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தாராபுரம் சங்கர் மில் பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனம் சுகாதாரச் சீர்கேட்டுடன் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. அதனால், அந்த நிறுவனத்துக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், நகரில் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளபட்டதில், சுகாதாரச் சீர்கேடு கண்டறியப்பட்டு, ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.