திருப்பூரில் பேருந்தில் பயணித்த தனியார் நிதி நிறுவன மேலாளரிடம் நகையைத் திருடியதாக, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பெண், இவரது மருமகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியது:
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே ஆலங்கொம்பு பகுதியைச் சேர்ந்தவர் வி.தீர்த்தேஷ்வரபிரசாத் (40). இவர், திருப்பூர், பெருமாநல்லூர் சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கிளை மேலாளராக வேலை செய்து வருகிறார். இவர், கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி தாராபுரத்தில் உள்ள கிளை நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 8 பவுன் நகைகளுடன் திருப்பூருக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். திருப்பூர் புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தபோது, நகை வைக்கப்பட்டிருந்த பை காணாமல் போனது அவருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து அவர் திருப்பூர் வடக்கு போலீஸில் புகார் அளித்தார். தனது அருகில் சிறு குழந்தையுடன் அமர்ந்து வந்த பெண் மீது சந்தேகப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், போலீஸார் திருப்பூர், குமரன் சிலை அருகில் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவர்கள், திருவண்ணாமலை, செங்கம் பகுதியைச் சேர்ந்த அலமேலு, இவரது மருமகன் பார்த்திபன் என்பதும், தீர்த்தேஷ்வரபிரசாத்திடம் நகையைத் திருடியதும் தெரியவந்தது. இந்த இருவரையும் போலீஸார் கைது செய்து, 8 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.