திருப்பூரில் வெவ்வேறு பகுதிகளில் பேருந்தில் பயணித்த பெண்களிடம் நகை திருடப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியது:
திருப்பூர், காங்கயம் சாலை, ராக்கியாபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி மனைவி கோகிலம் (62). இவர், கடந்த 1அம் தேதி இரவு உஷா திரையரங்க பேருந்து நிறுத்ததில் இருந்து ராக்கியாபாளையம் பிரிவுக்கு மாநகரப் பேருந்தில் வந்துள்ளார். பேருந்தில் இருந்து இறங்கிய அவர், தனது சாப்பாட்டுக் கூடையில், 5 பவுன் நகையுடன் வைத்திருந்த கைப்பை காணாமல்போனது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை மாலை திருப்பூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் இரு சம்பவங்கள்: திருப்பூர், தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி மனைவி ராசாத்தி (70). இவர், கடந்த திங்கள்கிழமை மாலை திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தென்னம்பாளையத்துக்கு மாநகர பேருந்தில் வந்துள்ளார். தென்னம்பாளையம் வந்தடைந்த அவர், தனது பையில் வைத்திருந்த 4 பவுன் சங்கிலி திருட்டுபோனது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக அவர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருப்பூர், வீரபாண்டி, அவரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைப்பிள்ளை மனைவி சரஸ்வதி (48). இவர், கடந்த திங்கள்கிழமை காலை வீரபாண்டி பகுதியிலிருந்து மாநகரப் பேருந்தில் பழைய பேருந்து நிலையம் சென்றார். பேருந்திலிருந்து இறங்கிய அவர், தான் அணிந்திருந்த முக்கால் பவுன் சங்கிலி காணாமல்போனது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பேருந்தில் பயணித்த பெண்களிடம் நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.