திருப்பூர், போயம்பாளையத்தில் மின்வாரிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பதாகைகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர், அலுவலகத்துக்குள் புகுந்து புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர், போயம்பாளையம் பகுதி ஆர்.கே.நகரில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பான விடியோ பதிவுகள் கட்செவிஅஞ்சல் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக வேகமாகப் பரவி வருகின்றன.
கடந்த 20 நாள்களுக்கு முன்பு இந்த அலுவலகம் முன்பாக, பொது மக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் உயர் அதிகாரிகளின் செல்லிடப்பேசி எண்ணுடன் கூடிய பதாகையும், முறைகேடுகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போயம்பாளையம் கிளை சார்பில் மற்றொரு பதாகையும் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பதாகைகள் அகற்றப்பட்டது அக்கட்சியினருக்கு புதன்கிழமை தெரியவந்தது.
அதையடுத்து, புதன்கிழமை மாலை போயம்பாளையம் கிளை செயலாளர் சசி, வட்டாரக் குழு உறுப்பினர் விஜய் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மின்வாரிய அலுவலகத்துக்குள் சென்று, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக, அங்கு சென்ற அனுப்பர்பாளையம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சரவணன், அவிநாசி செயற்பொறியாளர் பாலன், அனுப்பர்பாளையம் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முறைகேடுகளில் சம்பந்தபட்டவர்கள் மீதும், பதாகைகளை அகற்றியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.