திருப்பூரில், ஆதி திராவிடர் பெண்கள் விடுதியில் மாணவியரைக் கழிவறையை சுத்தம் செய்யுமாறு வார்டன் வற்புறுத்துவதாகக் கூறி, அவர் மீது காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் அருகே பெருமாநல்லூரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது இரண்டாவது மகள் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி, பள்ளிக்கு அருகில் ராயபுரம் பகுதியில் உள்ள ஆதி திராவிடர் பெண்கள் விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். இந்த விடுதியில் 42 மாணவிகள் தங்கியுள்ளனர்.
இங்கு, மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்தல், சமையலில் ஈடுபடுத்துவது போன்ற பணிகளைச் செய்யுமாறு விடுதி வார்டன் வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகின. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மூர்த்தி, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார்.
இதில், தனது மகளை கழிவறையை சுத்தம் செய்ய வைப்பது உள்ளிட்ட கடுமையான பணிகளை செய்ய வற்புறுத்துவதாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ள விடுதியில் சேர பணம் கேட்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.