உடுமலை நகராட்சிப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன.
உடுமலை நகரப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. காய்ச்சலால் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பள்ளிகள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் ஆகிய பகுதிகளில் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் மருந்து புகை இயந்திரம் மூலம் பரப்பப்பட்டது. நகர்நல அலுவலர் டாக்டர் கே.சி.அருண், சுகாதார ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பல்லடத்தில்: பல்லடம், கணபதிபாளையத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கைப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி உள்ளிட்ட அலுவலர்கள் இதனைப் பார்வையிட்டனர்.
சேவூர் வட்டாரத்தில் பாதிப்பு:
அவிநாசி ஒன்றியம், சேவூர் அருகே முதலிபாளையத்தில் காவ்யா (4) என்ற சிறுமியும், பவர்ஹவுஸ் பகுதியில் பிரவீண் (8) என்ற சிறுவனும் டெங்கு காய்ச்சலால் அண்மையில் உயிரிழந்துள்ளனர். முதலிபாளையம், பவர்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த 7-க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அவிநாசி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பெத்தநாயக்கன்பாளையத்தில் கடந்த சில தினங்களாக அப்பகுதி மக்கள் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த கீர்த்தி (12), மனோகரன்(18) உள்ளிட்டோர் மர்மக் காய்ச்சலுக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சேவூர் வட்டார மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.