தன்னம்பிக்கைதான் வெற்றியைத் தரும் என்று பல்லடம் பள்ளி விழாவில் விஞ்ஞானி பொன்ராஜ் பேசினார்.
பல்லடம், ப்ளூபேர்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தாளாளர் ராமசாமி தலைமை வகித்தார். முதல்வர் ஹேமலதா வரவேற்றார். பள்ளியின் துணை முதல்வர் ஜெயலட்சுமி நன்றி கூறினார். இவ்விழாவில் விஞ்ஞானி பொன்ராஜ் பேசியது:
குடியரசுத் தலைவராக இருந்து மறைந்த அப்துல் கலாம், தனது 10 வயதில் வானத்தில் பறக்க ஆசைப்பட்டார். அதற்காக முயன்றார். அவரது நம்பிக்கை எண்ணங்களாக உருமாறி, அவை செயல்களாக நிலை மாறி, சாதனையாக வெளிப்பட்டது. எனவே நாம் தன்னம்பிக்கையைத் தளர விடாமல் வாழ்ந்தால் சிறந்த மனிதனாக உயர முடியும் என்றார்.
ஐ.ஏ.எஸ். அகாதெமி துவக்கம்: பல்லடம் பாரத மாணவர் பேரவை சார்பில், பல்லடம் கண்ணம்மாள் கிளை நூலகத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரின் அர்ப்பணிப்பு விழா, அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அகாதெமி துவக்க விழாவில் விஞ்ஞானி பொன்ராஜ் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பாரத மாணவர் பேரவையின் மாநிலத் தலைவர் ஆ.அண்ணாதுரை, ஜெய்சக்தி விராஜ குருகுலக் கல்வி நிலையத் தாளாளர் தெய்வசிகாமணி, மாவட்ட நூலகர் என்.மணிகண்டன், நூலக அலுவலர்கள் இ.ஜெயராஜ், நா.அரவிந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.