திருப்பூரில் மாநகர காவல் துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, போலீஸார் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாரத்தான் போட்டி தொடங்கியது. கல்லூரி மைதானத்தில் தொடங்கிய ஓட்டம், வஞ்சிபாளையம் சாலை வழியாக 6 கி.மீ. தொலைவில் நிறைவு பெற்றது. இதில், போலீஸார், பொதுமக்கள் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆடவர், மகளிருக்கென தனித்தனிப் போட்டிகள் நடத்தப்பட்டன.
முன்னதாக இரு பிரிவுகளிலும் போட்டியை காவல் ஆணையர் நாகராஜன் தொடங்கி வைத்தார். தனித்தனியாக நடத்தப்பட்ட இப்போட்டிகளில், இரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு, வரும் 22-ஆம் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.