உடுமலையில் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்யும் லாரிகளை பொதுமக்கள் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட கைகலப்பு சம்பவத்தை அடுத்து 4 தண்ணீர் லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
உடுமலையில், தண்ணீருக்காக பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக, ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்யக் கூடாது என வருவாய்த் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், உடுமலை, ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்லும்போது லாரிகளை அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை மறித்தனர். இதனால், பொதுமக்களுக்கும், தண்ணீர் லாரி உரிமையாளர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது.
இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று இரு தரப்பினரையும் அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், 4 தண்ணீர் லாரிகளைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 4 லாரிகளையும் விடுவிக்கக் கோரி 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளை காவல் நிலையம் முன்பாக நிறுத்திய லாரி உரிமையாளர்கள், கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இப்பிரச்னை தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இது குறித்து கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள் கூறியதாவது: உடுமலை நகரில் தண்ணீர்ப் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வணிகரீதியாக விற்பனை செய்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான தண்ணீர் லாரிகள் இரவு, பகலாக தண்ணீரை உறிஞ்சி எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. தண்ணீர் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வரை காவல் நிலையம் முன்பாக நிறுத்தப்பட்டிருக்கும் தண்ணீர் லாரிகளை எடுத்துச் செல்லக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.