பல்லடத்தில் வாகனப் போக்குவரத்தை சீரமைக்க புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொமதேக) வலியுறுத்தியுள்ளது.
பல்லடம் ஒன்றிய கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் சுக்கம்பாளையம் சின்னம்மன் கோயில் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் சுரேஷ் பொன்னுவேல் தலைமை வகித்தார். மாநில இளைஞரணிச் செயலாளர் சூரியமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திருப்பூர் மேற்கு மாவட்டத் தலைவராக எம்.ராமசாமி, மாவட்டச் செயலாளராக கரைப்புதூர் சி.ராஜேந்திரன், பொருளாளராக ஆறாக்குளம் சுப்பிரமணியம், மாவட்ட விவசாய அணிச் செயலாளராக பொங்கலூர் சிவசுப்பிரமணியம், பல்லடம் ஒன்றியத் தலைவராக முத்தாண்டிபாளையம் மணியன், தெற்கு ஒன்றியச் செயலாளராக சித்தம்பலம் கோபாலகிருஷ்ணன், வடக்கு ஒன்றியச் செயலாளராக பூமலூர் பூபதி, இளைஞரணிச் செயலாளராக வீராக்குமார், மாணவரணிச் செயலாளராக மோகனகிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில், பல்லடம் நகரில் வாகனப் பெருக்கத்தால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பல்லடம் - திருப்பூர் சாலை ஆகியவற்றைக் கடந்து செல்ல மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, பல்லடத்தில் புறவழிச்சாலை மற்றும் சுற்றுவட்டச் சாலை அமைக்க வேண்டும். பல்லடத்தில், மங்கலம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.விசைத்தறி,
கோழிப்பண்ணைத் தொழிலைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.