ஏ.பி.டி. சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண வேண்டும் என நாளைய திருப்பூர் மக்கள் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, நாளைய திருப்பூர் மக்கள் அமைப்பினர் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் அருகில் உள்ள பகுதிகளில் மூன்று இடங்களில் தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பேருந்து நிலையங்களில் கழிவறை வசதி இல்லாத காரணத்தால், பெண்கள் மற்றும் முதியோர் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.இதில், மாநகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள தாற்காலிகப் பேருந்து நிலையத்தில் கழிவறை வசதி தற்போது
ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பெருமாள் கோயில் அருகிலும், அரசு மருத்துவமனை எதிரிலும் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்தங்களில் இதுவரை கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, பொது மக்கள் நலன் கருதி இரு தாற்காலிகப் பேருந்து நிலைய வளாகங்களிலும் கழிவறை வசதியை உடனடியாக ஏற்படுத்தித் தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.மேலும், பாலம் கட்டும் வேலை காரணமாக பல்லடம் சாலையில் செல்லும் வாகனங்கள் ஏ.பி.டி. சாலை வழியாக செல்கின்றன. ஏ.பி.டி. சாலையில் கடை வைத்துள்ளவர்கள் சாலையை ஆக்கிரமிப்புச் செய்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல் எப்போதும் போக்குவரத்து நெரிசலாகவே உள்ளது. எனவே, ஏ.பி.டி. சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.