பெரியாயிபாளையத்தில் சீரான குடிநீர் வழங்கக் கோரி பொது மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட பெரியாயிபாளையம், ஜீவா நகர், காமாட்சியம்மன் நகர், காமராஜர் நகர், அம்பாள் காலனி, காரைக்காடு, புது காலனி , பழைய காலனி உள்ளிட்ட பகுதிகளில் 5,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக ஆழ்துளைக் கிணற்றுநீர் விநியோகிக்கப்படவில்லை.
மேலும் கடந்த 2 மாதங்களாக தெருக் குழாய்களிலும் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லையாம். இதுகுறித்து, ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லையாம்.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் பெரியாயிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி காவல் துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) செல்வராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், ஏற்கெனவே அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றுக்கு மின் மோட்டர் பொருத்தப்படும். கூடுதலாகக் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை: அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட பழங்கரை, வேலம்பாளையம் ஊராட்சி ஆதிதிராவிடர் காலனி, தத்தனூர் ஊராட்சி சுள்ளிப்பாளையம், ராமநாதபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வழங்கக் கோரி அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
மேலும், கோரிக்கை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், உடனடியாக ஆய்வு மேற்கொண்டு சீரான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து, அனைவரும் கலைந்துசென்றனர்.