அவிநாசி அருகே தனியார் பேருந்து, லாரி விபத்துக்குள்ளானதில் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தார். 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரில் இருந்து தனியார் பேருந்து 60-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அவிநாசி வழியாக கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து அவிநாசி, தெக்கலூர், நல்லிக்கவுண்டன்பாளையம் பிரிவு அருகே செல்லும்போது, பேருந்துக்கு முன்னாள் சங்ககிரியில் இருந்து கோவை, அரசூருக்கு சிமெண்ட் பாரம் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியது.
இதில், ஈரோடு மாவட்டம், நம்பியூரைச் சேர்ந்த நந்தகுமார்(32), சுஹாசினி (21), அந்தியூரைச் சேர்ந்த ஜோதி பிரியா(23), கோபியைச் சேர்ந்த ரேணுகாதேவி(24), அத்தாணியைச் சேர்ந்த இலக்கியா(23), கடத்தூரைச் சேர்ந்த ஆஷிக்பா தமன்னா (19), அந்தியூரைச் சேர்ந்த விஜயா(37) உள்ளிட்டோர் பலத்த காயமடைந்தனர்.
இவர்கள், கோவையில் உள்ள தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இலக்கியா உயிரிழந்தார்.
இதுகுறித்து, அவிநாசி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.