உடுமலையில் திறன் மேம்பாட்டு மையம் தொடக்க விழா திங்கள்கிழமை நடை பெற்றது.
இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தி, அவர்களுக்கான வேலைவா ய்ப்பைப் பெருக்கும் நோக்கில் மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பில் பல்வேறு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, சிசிடிவி இன்ஸ்டலேஷன், காப்பீட்டு முகவர் பயிற்சிகள், செல்லிடப்பேசி பழுது நீக்கம், தையல் பயிற்சிகள், கழிவுநீர் சுத்திகரிப் புத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பங்கேற்பவர்களுக்கு சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. குறிப்பாக, இதில் பயிற்சியை முடிப்பவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன் வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது.
இந்நிலையில், இந்தத் திறன் மேம்பாட்டு மைய தொடக்க விழா தளி சாலை, பழனி ஆண்டவர் மில் வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு சத்யநாதன் தலைமை வகித்தார். மைய அலுவலர் வி.ராமகிருஷ்ணன் வரவேற்றார். மாநிலத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் திட்டம் குறித்து விளக்கிப் பேசினார்.
உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பி.கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இப்பயிற்சியில் சேர ஆண், பெண் இருபாலாரும் 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்டவராகவும், 8-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 9626255855, 9843368466 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.