உடுமலை அருகே காட்டெருமை தாக்கி யானை சாவு
உடுமலை அருகே காட்டெருமைக்கும், யானைக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் யானை உயிரிழந்தது.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழக-கேரள எல்லையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட யானைகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில், அமராவதி வனச் சரகத்துக்கு உள்பட்ட மஞ்சம்பட்டி மலைக் கிராமம் அருகே யானை உயிரிழந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதையடுத்து, அமராவதி வனச் சரக அலுவலர்கள் திங்கள்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். இதில் உயிரிழந்து கிடந்தது 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை எனத் தெரியவந்தது.
இது குறித்து வனத் துறையினர் கூறியதாவது:
அமராவதி வனச் சரகத்தில் 35 வயது பெண் யானை உயிரிழந்துள்ளது. இந்த யானைக்கும், காட்டெருமைக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான சண்டையில், யானைக்கு காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. உயிரிழந்த யானைக்கு பிரேதப் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.