திருப்பூரில், கைகலப்பு சம்பவத்தின்போது கல்லால் தாக்கப்பட்ட கடலை வியாபாரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
திருப்பூர் அருகே ஊத்துக்குளி, கொடியம்பாளையம் நான்கு சாலை சந்திப்புப் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீத்குமார் (39), கடலை வியாபாரம் செய்து வந்தார். இவர், கடந்த 14-ஆம் தேதி திருப்பூர், யூனியன் மில் சாலையில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது, திருப்பூர், வித்யாலயம் பகுதியில் உள்ள பனியன் பிரிண்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வரும் பெரம்பலூர் மாவட்டம், பூலாம்படியைச் சேர்ந்த சசிக்குமார் (24) மதுபோதையில் யூனியன் மில் சாலையில் சென்றுள்ளார்.
அப்போது, சங்கீத்குமாருக்கும், சசிகுமாருக்கும் இடையே தராறு ஏற்பட்டு, இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனராம். சசிகுமார், சாலையோரம் கிடந்த கல்லை எடுத்து, சங்கீத்குமாரின் தலையில் தாக்கியுள்ளார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள், அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர், அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சங்கீத்குமார் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். இதையடுத்து போலீஸார், அடிதடி வழக்கை, கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்துள்ளனர்.