காங்கயம் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் இருந்து மண் எடுத்துச் செல்வதற்கு 68 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காங்கயம் பகுதியில் உள்ள பொதுப் பணித் துறை, உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், நீர்த்தேக்கங்களிலிருந்து விவசாயப் பணி, வீட்டு உபயோகம், மண்பாண்டம் செய்தல் ஆகிய பணிகளுக்காக வண்டல், சவுடு மண், கிராவல் ஆகியவற்றை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், நீர்நிலைகளில் இருந்து மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவது தொடர்பான சிறப்பு முகாம் காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தகுதியுள்ள 68 மனுதாரர்களுக்கு மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இது குறித்து காங்கயம் வட்டாட்சியர் தே.வேங்கடலட்சுமி கூறியதாவது:
காங்கயம் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் இருந்து சொந்த உபயோகத்துக்காக மண் எடுத்துச் செல்வதற்கு, கடந்த 12-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை மொத்தம் 274 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுதாரர்கள் அனைவருக்கும் மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.