அவிநாசி அருகே மனிதக் கழிவுகளைக் கொட்டிவந்த வாகனத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறைபிடித்தனர்.
அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட ரங்கா நகர், ஐயப்பா கார்டன், வைஷ்ணவி கார்டன், ருக்மா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இக்குடியிருப்புப் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில், கடந்த பல மாதங்களாகவே மனிதக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதாரக் சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் மனுக் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், அப்பகுதியில் மனிதக் கழிவுகளைக் கொட்ட வந்த வாகனத்தை அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை சிறைபிடித்தனர். அவர்களிடம், போலீஸார், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இனிமேல், இப்பகுதியில் மனிதக் கழிவுகளை கொட்ட அனுமதிக்கப்படமாட்டாது என உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.