நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு அழைப்பு விடுப்போம் என்று ஏர்முனை இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் பொங்கலூர் ரா.மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
ஏர்முனை இளைஞர் பேரவையின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காங்கயம் அருகே தாயம்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிறுவனத் தலைவர் பொங்கலூர் ரா.மணிகண்டன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் சோமசுந்தரம், மாநில மகளிர் அணி செயலாளர் விசாலாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பொங்கலூர் ரா.மணிகண்டன் பேசியதாவது:
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தேசிய சிந்தனையும், ஆன்மிகச் சிந்தனையும் மேலோங்கும். 60 சதவீத மக்கள், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவரை ஏற்றுக் கொள்வார்கள். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் முழுமையாக ஆதரிப்போம் என்றார்.
இதில், ஏர்முனை இளைஞர் பேரவை மாநிலச் செயலாளர் எஸ்.சஞ்சித், பேரவையின் மாவட்டச் செயலாளர்கள் வி.ஜெயகுமார் (கோவை), செந்தில்குமார் ( திருப்பூர்), கணேஷ்குமார் (திண்டுக்கல்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.