காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா காங்கயம் அருகே திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, காங்கயம் வட்டாரத் தலைவர் கே.ஆர்.லோகநாதன் தலைமையில், சிவன்மலை ஊராட்சிக்கு உள்பட்ட ராசாப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட எழுதுபொருள்கள், இனிப்பு வழங்கப்பட்டன. படியூர் ஊராட்சி முன்னாள் தலைவர் கே.சண்முகசுந்தரம், தலைமையாசிரியர் எம்.புஷ்பநாதன், ஆசிரியை எஸ்.வனிதா மார்கரெட், காங்கிரஸ் கட்சியின் கிளை பொறுப்பாளர்கள் முத்துகுமார், பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அவிநாசியில்...ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி, அவிநாசியில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. அவிநாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி தொடக்கிவைத்தார். பேரூராட்சி முன்னாள் தலைவர் அ.வெங்கடாசலம் தலைமை வகித்தார். நகரத் தலைவர் கோபாலகிருஷ்ணன், வட்டாரத் தலைவர் மணி, இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சாய்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி முன்னாள் தலைவர் சரவணன், பொறுப்பாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தாராபுரத்தில்... ராகுல் காந்தியின் பிறந்த தினத்தையொட்டி, தாராபுரம் நகராட்சி அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். எம்.எல்.ஏ. வி.எஸ்.கே.காளிமுத்து, திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் கே.எஸ்.தென்னரசு, மகளிர் காங்கிரஸ் மாநிலச் செயலர் மாலதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.