அவிநாசியை அடுத்த குப்பாண்டம்பாளையத்தில் குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குப்பாண்டம்பாளையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக ஆழ்துளைக் கிணற்று நீர் விநியோகிக்கப்படவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் குப்பாண்டம்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இப்பகுதிக்கு ஆற்றுக் குடிநீர் போதுமான அளவு கிடைப்பதிலலை. அதிலும், தற்போது பழங்கரை முதல் கல்லுமடைக்குட்டை வரை சாலை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் ஆழ்துளைக் கிணற்று நீரின் பிரதானக் குழாய் அடிக்கடி சேதமடைகிறது.
இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன் பிரதான குடிநீர்க் குழாய் உடைந்ததால் இப்பகுதிக்கு நீர் கிடைப்பதில்லை. இதை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். மேலும், இச்சாலைப் பணியை விரைவில் முடிக்க வேண்டும்' என்றனர்.
சம்பவ இடத்துக்கு வந்த ஒன்றிய அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடனடியாக பிரதானக் குழாய் சீரமைக்கப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர்.