பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகப் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கக் கூட்டம் காங்கயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சரவணராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் யசோதா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் சேசுராஜா சிறப்புரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பகுதிநேர சிறப்பாசிரியர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி நிரந்தரம் இல்லாத பட்சத்தில் முழுநேரப் பணியும், காலமுறை ஊதியமும் வழங்க வேண்டும். மாவட்டத்துக்குள் கலந்தாய்வு மற்றும் மே மாத ஊதியம் வழங்க வேண்டும். மகளிர் சிறப்பாசிரியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.