திருப்பூரில் கோயில் உண்டியலை உடைத்து திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியது:
திருப்பூர், போயம்பாளையம், அவிநாசி வீதியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்துக்குள் உண்டியல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு கோயில் சுற்றுச்சுவரை தாண்டி உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் கோயிலில் இருந்த அம்மன் நகை உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.