திருப்பூரில் தனியார் கல்விப் பயிற்சி மையத்துக்கு சென்ற மாணவர்கள் இருவர் காணாமல் போனது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
திருப்பூர், குமரானந்தபுரம், காமாட்சியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் பிரவீன்ராஜ் (15). திருப்பூர், குமார் நகரில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே போல், பழனியப்பா நகரைச் சேர்ந்த அந்தோணியின் மகன் ஆதீஷ் அந்தோணி. இவர் டுட்டோரியல் கல்லூரியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இருவரும், டீச்சர்ஸ் காலனியில் உள்ள தனியார் கல்விப் பயிற்சி மையத்தில் படித்து வந்தனர். இதனால் இருவரும் நண்பர்களாகி பழகி வந்தனர். இந்நிலையில், வழக்கம் போல் தனியார் பயிற்சி மையத்துக்கு கடந்த 24-ஆம் தேதி சென்ற இருவரும், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இருவரின் பெற்றோரும் பல இடங்களில் தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, காணாமல் போன இரு மாணவர்களையும் தேடி வருகின்றனர்.