மாவட்டத்தில் மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் வழங்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக மாவட்ட அளவிலான தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி பேசியதாவது:
மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குடிநீர் விநியோகம் தங்குத் தடையின்றி வழங்க, தமிழ்நாடு மின்சார வாரியத்தால் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். அனைத்து வட்டாரங்களிலும் நடைபெறும் தமிழ்நாடு மின்சார வாரிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மின்வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), திருப்பூர் மாநகராட்சி செயற்பொறியாளர், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கிராம ஊராட்சிகள்), அனைத்துத் துறை செயற்பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.