பல்லடம் அலுத்துபாளையத்தில் மதுக்கடை அமைய உள்ள கட்டடத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
பல்லடம் ஒன்றியம், வடுகபாளையம்புதூர் ஊராட்சியில் அரசு மதுபானக் கடை திறக்க கூடாது என்று அண்மையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த ஊராட்சிக்கு உள்பட்ட அலுத்துபாளையம் கிராமத்தில் மதுக் கடை அமைக்க தனியார் இடத்தில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் மதுக்கடை அமைய உள்ள கட்டடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த பல்லடம் காவல் ஆய்வாளர் தங்கராஜ், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றதோடு திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதே போல் சுக்கம்பாளையத்தில் மதுக்கடை திறக்க கூடாது என்பதை வலியுறுத்தி அக்கிராம மக்களும் கோரிக்கை மனு அளித்தனர்.