பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.06% பேர் தேர்ச்சி: மாநில அளவில் 7-ஆம் இடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், திருப்பூர் மாவட்டம் 97.06 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 7-ஆம் இடம் பிடித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், திருப்பூர் மாவட்டம் 97.06 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 7-ஆம் இடம் பிடித்துள்ளது.
தமிழ்நாடு அரசு தேர்வுத் துறையால் நடத்தப்படும் 2016-2017-ஆம் கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள், மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி மார்ச் 30-ஆம் தேதி நிறைவு பெற்றது. தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன.
திருப்பூரில் தேர்வு முடிவுகளை மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி வெளியிட்டார். முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சாந்தி, மாவட்ட கல்வி அலுவலர் பி.காந்திமதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு, நகராட்சி, உதவிபெறும் மற்றும் சுயநிதி, மெட்ரிக் பள்ளிகள் என 331 பள்ளிகளில் 14,313 மாணவர்கள், 14,529 மாணவிகள் என மொத்தம் 28,842 பேர் தேர்வெழுதினர். இதில் 13,791 மாணவர்கள் (96.35%),  14,204 மாணவிகள் (97.76%) என மொத்தம் 27,995 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்த மாவட்ட தேர்ச்சி சதவீதம் 97.06 ஆகும். கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தமாக 95.62 சதவீதம் தேர்ச்சி இருந்தது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 1.44 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில், மாநில அளவில் 14-ஆம் இடம் பெற்றிருந்த திருப்பூர், இந்த ஆண்டில் முன்னேறமடைந்து 7-ஆம் இடம் பெற்றுள்ளது. கல்வி நிலையங்கள் அதிகம் நிறைந்த, கோவை, நாமக்கல் போன்ற மாவட்டங்களைப் பின்னுக்குத் தள்ளி, திருப்பூர் இந்த இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்:
மாவட்டத்தில் உள்ள மொத்தம் 134 அரசுப் பள்ளிகளில் 59 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்தாண்டில் 48 அரசுப் பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றிருந்தன. இந்த ஆண்டில் கூடுதலாக 11 பள்ளிகள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளன.
மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளைப் பொருத்தவரை 12 பள்ளிகளில் 3 பள்ளிகள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளன. பத்மாவதிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி, நொய்யல் வீதி உயர்நிலைப் பள்ளி, குமாரானந்தபுரம் மேல்நிலைப் பள்ளிகள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு 2 பள்ளிகள் மட்டுமே முழுத் தேர்ச்சி பெற்றிருந்தன.
அரசு உதவி பெறும் பள்ளிகள் 21-இல் 5 பள்ளிகள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் 6 பள்ளிகள் முழுத் தேர்ச்சி பெற்றிருந்தன. நடப்பாண்டில் அது குறைந்துள்ளது. சுயநிதிப் பள்ளிகளைப் பொருத்தவரை, 21 பள்ளிகளில் 15 பள்ளிகள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் 17 பள்ளிகள் முழுத் தேர்ச்சி பெற்றன. நடப்பாண்டில் 2 எண்ணிக்கை குறைந்துள்ளது. 143 மெட்ரிக் பள்ளிகளில் 112 பள்ளிகள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் 110 பள்ளிகள் முழுத் தேர்ச்சி பெற்றிருந்தன. நடப்பாண்டில் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
மொத்தமாக 331 பள்ளிகளில் 194 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் 183 பள்ளிகள் முழுத் தேர்ச்சி பெற்றிருந்தன. பிற பள்ளிகளைக் காட்டிலும் அரசுப் பள்ளிகளில் முழுத் தேர்ச்சி அளவு அதிகரித்துள்ளது. சுயநிதி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் முழுத் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com